Skip to main content

இருப்பை இழந்து நிற்கும் இலுப்பை

தேனினை விரும்பி உண்ணும் கரடிகள், கூட்டம் கூட்டமாக ஒரு மரத்தை நோக்கிச் செல்கின்றன, குட்டி ஈன்ற தாய் கரடி கூட தனது கூட்டத்துடன் அந்த மரத்தை நோக்கிப் பயணப்படுகிறது. மரத்தின் கீழே கொட்டிக்கிடக்கிற பூக்களைத் தின்றுவிட்டு, இன்னும் சுவையான பூக்களை நாடி மரத்தின் மீது ஏறி சுவைமிகுந்த பூக்களை உண்டு கிளைகளில் படுத்துக்கிடக்கின்றன. இந்தக் காட்சி Discovery Channel – ல் வரும் நிகழ்ச்சி அல்ல, நமது மரபு இலக்கியமான சங்க இலக்கியத்தொகுதியில் ஒன்றான அகநானூற்றில் இலுப்பைப் பூ பற்றி இடம்பெறும் இலக்கிய சாட்சி. சங்க இலக்கியத்தில் இருப்பை என்றழைக்கப்படுகிற இலுப்பை தமிழகத்தின் நிலவெளியில் குறிப்பிடத்தகுந்த ஒரு தாவரமாகும். ஆனால், இன்று இலுப்பை மரம் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. கரடிகளைக்கூட கவர்ந்து  இழுத்த இந்த மரம் இன்று கவனிக்கப்படாமல் கேட்பார் அற்று கிடப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக்கட்டுரை.

இயற்கையோடு இலுப்பை

தமிழர்கள் இயற்கையின் மீது வன்முறையைச் செலுத்தாது இயற்கையோடு இணைந்து இனிமையாக வாழ்ந்த காலப்பகுதியின் இலக்கிய சாட்சியங்கள் சங்க இலக்கியங்கள். இந்த சங்க இலக்கியத்தொகுதி முழுவதும் இலுப்பை மரத்தைப் பற்றிய பலதரப்பட்ட சித்திரிப்புகள் விரவிக்கிடக்கின்றன. இம்மரம் நீளமாக வளரும், அடிமரம் பெருத்துக் காணப்படும்  (அகம்.95, 215,  247, 321, 331. புறம்.384),  இம்மரத்தின் இலைகள் வெயிற்காலத் தொடக்கத்தில் கொழுந்து விடத் துவங்கும்போது மரமெல்லாம் இளந்தளிராக செப்புத்தகடு போல சிவந்து சூரியனின் ஒளியில் மின்னும் (அகம் 107, 331), இலுப்பையின் பூ வெண்மையாகவும் காட்டுப்பூனையின் காலடி போன்றும் இருக்கும் (அகம். 267), இலுப்பைப் பூக்கள் வீழ்ந்து கிடப்பது வெண்மையான ஆலங்கட்டி வீழ்ந்து கிடப்பது போல் உள்ளது. மேலும், வெளவால் கூட்டம் இலுப்பைப் பழங்களை விரும்பி உண்ணும் (நற்றிணை, 279). 


கொத்தாக துளிர்விடும் இலுப்பைப் பூக்கள்


ஆலங்கட்டி போன்ற வெண்மையான இலுப்பைப் பூ

மேற்கண்ட இந்த செய்திகளின் மூலமாக இலுப்பை மரம் சங்க கால மக்களுக்கு மிகவும் அறிமுகமானதாகவும் அவர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று இலுப்பை மரம் மனிதனின் நுகர்வுக்கும் பயன்பாட்டிற்கும் உகந்ததாக எங்கேயும் சித்திரிக்கப் படவில்லை என்பது, எனவே, இலுப்பை இயற்கையானது இயற்கைக்கானது என்ற கருத்தாக்கமே நமது மூதாதையர்களிடம் இருந்தது என்பதை அனுமானிக்கலாம்.

இறைவனோடு இலுப்பை

சங்க காலத்திற்குப் பிறகு, இறை வழிபாடு முன்னிலைப்படுத்தப்பட்டு பக்தி இயக்கம் ஆலய வழிபாட்டில் கவனம் செலுத்திய போது, இயற்கையை இறைவனோடும் இறைவனுக்கு உரியதாகவும் கருதும் சிந்தனைப்போக்கு வளரத்துவங்கியது. இதன் காரணமாக பல தாவரங்கள் கோயில் தல விருட்சங்களாகவும், கோயில் சார்ந்த காடுகள் கோயில் காடுகளாகவும் மாற்றம் பெற்றன. இதன் நீட்சியாக இருப்பை மாகாளம், மண்ணப்படிக்கரை, திருச்செங்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய தலங்களில் இலுப்பை மரம் தல விருட்சம் என்னும் நிலையைப் பெற்றது. பக்தி இலக்கியக் காலத்தினுடைய இறை வழிபாடுகளில் விளக்கேற்றுதல் எனும் சடங்கு முக்கிய இடத்தைப் பெறத்துவங்கியதின் காரணமாக எரிபொருள் முக்கியத்தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கோவில்களுக்குக் கால்நடைகள் நிவந்தங்களாகக் கொடுக்கப்பட்டன என்கிற செய்தியை கல்வெட்டுக்கள் கூறுகின்றன.  


ஆனால் இந்த எரிபொருள் தேவையை இலுப்பை மரங்களும் நிவர்த்தி செய்திருக்கின்றன என்று கூறும் கு. வி. கிருஷ்ணமூர்த்தி, கோவில்களில் எரியும் விளக்குகளுக்கு எண்ணெயாக இடைக்காலத் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான தாவர எண்ணெய் இலுப்பை விதை எண்ணெயாகும். இதற்கான சான்றுகளைப் பல்வேறு கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவிலின் எண்ணெய் தேவைகளுக்காக இலுப்பை மரங்களும், இலுப்பைத் தோப்புகளும் கோவில்களுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டதைப் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன” என்கிறார். மேற்கண்ட கருத்தின் வழி பக்தி இலக்கிய காலத்தில் இலுப்பை எண்ணெய் இறைவனுக்கானதாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் இலுப்பை மரம் மனிதனுக்கு  நுகர்வாக இல்லாமல் இறைவனுக்கானதாக மட்டும் கருதப்பட்ட நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. 


மனிதனோடு இலுப்பை

இலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி இணையத்தில் பல்வேறுத் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை பற்றி உறுதியான பதிலைக் கூற முடியாவிட்டாலும், இந்த மரத்தின் பல பாகங்கள் மனிதனுக்கு மருத்துவ ரீதியான பயனைக் கொடுக்கின்றன என்பது முக்கியமானதாகும். மருத்துவப்பொருளாக மட்டுமல்லாமல், மரச்சாமான்கள், மாட்டு வண்டி, மரச்சிற்பங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் நாட்டார் புழங்கு பொருட்களின் உற்பத்தியிலும் இலுப்பை மரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


இதுவரை இலுப்பை மரம் இயற்கையோடும் இறைவனோடும் மனிதனோடும் கொண்ட உறவு நிலைகளைத் தெரிந்து கொண்டதன் வழி சில முடிவுகளை அனுமானிக்க முடியும். நுகர்வின் அடிப்படையிலும் மனிதனின் பயன்பாடு அடிப்படையிலும் இலுப்பை மாறியதின் விளைவே இலுப்பை மரங்களின் அழிவிற்கு முக்கியக்காரணமாகும். இலுப்பை எண்ணெய், இலுப்பைப்பூ (சர்க்கரை) ஆகியவற்றுக்கு மாற்றாக இதைவிடக் கூடுதல் இலாபமும் அதிக உற்பத்தியும் தருகிற பொருட்கள் கிடைத்தவுடன் மனிதன் இலுப்பையின் மகத்துவத்தையும்  முக்கியத்துவத்தையும் மறக்கத்துவங்கினான். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதனின் சுயநல எண்ணம் கரடிகளின் உணவு பற்றியோ, வெளவால்களின் தேவை  பற்றியோ, சூழலியல் அவசியம் பற்றியோ, பல்லுயிர் பெருக்கம் பற்றியோ சிறிதும் நினைக்கவில்லை. இதன் விளைவாக இலுப்பை இழந்திருக்கிறது அதன் வனப்பை. கரடியை வித்தைக்காட்டவும், வெளவாலைப் பேயாகவும் மாற்றியிருக்கிற சுயநல மனிதர்களிடம் தனது இருப்பை இழந்து நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் தான் இலுப்பை மரங்கள் வாழ்ந்து வருகின்றன.     மனிதர்களைப் பொருத்தவரை இலுப்பை ஒரு மரம், ஆனால் இயற்கைக்கு இது ஒரு அரிய வரம்.


படம் - கெளதம், ஆதிரா

Comments

  1. நிலமும், நிலத்தின் மரங்களும் , மிருகங்களும் மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் தன்மையை, இலுப்பை மரத்தின் உதாரணம் கொண்டு சங்க இலக்கியச் சான்றுகளோடு விவரிக்கும் கூர்மையான பதிவு 👌

    ReplyDelete
  2. Well written.I have been seeing it for the first time through ur pic...have heard abt only the oil..very happy to hear that it's the food for the bear...

    ReplyDelete
  3. Very well described and inspiring.

    ReplyDelete
  4. Wonderful work of spatially charting out the distribution of the Madhuca Longifolia Tree in white town. I also work in the habitat of madhuca longifolia here in Keonjhar District, Odisha. It's a prerequisite for many livelihood and cultural activities of locals here.

    ReplyDelete
    Replies
    1. Nice to know that Mohit. Here in Tamil Nadu, there prepare sugar solution from the flowers, in chattisgarh toddy is prepared from the flowers. Is there any such practices in Odisha, which is different?

      Delete

Post a Comment

Thank you for reading. Really appreciate your time. Would be great if you could share your thoughts about the article you just read. Will be happy to discuss about it. Little bit of discussion helps! Always!